ராம ஜென்மபூமி அறக்கட்டளை என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தி நகரத்தில் அமைந்த, ராமர் பிறந்த பூமியில், மீண்டும் இராமருக்கு கோயில் எழுப்பவதே நோக்கமாகக் கொண்டு, விசுவ இந்து பரிசத்தால் 25 சனவரி 1993இல் துவக்கப்பட்டது.[1] இராமச்சந்திர தாஸ் பரமஹன்ஸ் (1913-2003) என்பவர் இவ்வறக்கட்டளையின் தலைவராக செயல்பட்டவர்.[2] துணைத்தலைவராக இருந்த மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் தற்போது இவ்வமைப்பின் தலைவராக உள்ளார்.[3][4]
அயோத்தி நகருக்கு வெளியே கரசேவபுரம் எனும் தற்காலிக நகரை உருவாக்கி, நாடு முழுவதிலிருந்து வந்திருந்த கரசேவகர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்களைக் கொண்டு இராமர் கோயில் கட்டுவதற்கான தூண்கள், சிலைகள் போன்ற கட்டுமானப் பொருட்கள் உருவாக்கி வைத்துள்ளனர்.
அயோத்தி, ராம ஜென்மபூமியில் 16ஆம் நூற்றாண்டு வரை இராமர் கோயில் இருந்ததென்றும், பின்பு அவ்விடத்தில் இருந்த ராமர் கோயிலை இடித்து விட்டு, பாபரின் படைத்தலைவர் பாபர் பெயரில் ஒரு மசூதி கட்டுவித்தார் என்று கருதப்பட்டு வந்தது.[5][6]
இந்திய விடுதலைக்குப் பிறகு 1948 ஆண்டு முதல் பாபர் மசூதி வளாகம் பூட்டப்பட்டு, 1989 வரை இந்த நிலையே தொடர்ந்தது. 1949ல் பாபர் மசூதியினுள் ராமர் மற்றும் சீதையின் சிலைகள் நிறுவப்பட்டு பூசைகள் நடந்தன. 1989ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் ராமர் சிலைக்கு பூஜை செய்ய சட்டபூர்வமாக அனுமதி வழங்கியது. இதை முன்னிட்டு முஸ்லீம் - இந்து கலவரங்கள் துவங்கியது.
டிசம்பர் 6, 1992 அன்று சங்கப் பரிவார அமைப்பின் கரசேவகர்கள் பாபர் மசூதியை இடித்து விட்டு அங்கு இராமர் சிலையை நிறுவினர்.[7][8][9] 1993 ல் இந்திய அரசு சர்ச்சைக்குரிய 67.7 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது.
அலகாபாத் உயர் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாகப் பிரித்து, ஒரு பகுதி ராம ஜென்மபூமி அறக்கட்டளைக்கும் , ஒரு பகுதி சுன்னி வக்பு வாரியத்துக்கும், மீதமுள்ள பகுதி நிர்மோகி அகாரா என்ற இந்து அமைப்பிற்கும் பிரித்து வழங்கி 2010ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது.
ராம ஜன்மபூமி அறக்கட்டளை, நிர்மோகி அகாரா மற்றும் அகில இந்திய இஸ்லாமியத் தனிநபர்ச் சட்ட வாரியம், அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதனால் உச்ச நீதிமன்றம், அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளது.[10][11]
9 நவம்பர் 2019-இல் இந்திய உச்ச நீதிமன்றம் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் இந்திய அரசு 3 மாதத்திற்குள் இராமர் கோயில் கட்ட அறக்கட்டளை நிறுவவும், இசுலாமியர்கள் தொழுகை நடத்த அயோத்தியில் 5 ஏக்கர் நிலம் வழங்க தீர்ப்பு வழங்கியது.[12]