வால்சந்த் இராசந்த் | |
---|---|
![]() | |
பிறப்பு | சோலாப்பூர், மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 23 நவம்பர் 1882
இறப்பு | 8 ஏப்ரல் 1953 சித்பூர்,மும்பை மாகாணம், இந்தியா | (அகவை 70)
தேசியம் | இந்தியன் |
பணி | வால்சந்த் குழுமத்தின் தலைவர் |
உறவினர்கள் | வால்சந்த் குடும்பம் |
வால்சந்த் இராச்சந்த் தோசி (Walchand Hirachand Doshi) (1882 நவம்பர் 23 - 1953 ஏப்ரல் 8) இவர் ஓர் இந்திய தொழிலதிபரும், வால்சந்த் குழுவின் நிறுவனருமாவார். இவர் இந்தியாவின் முதல் நவீன கப்பல் தளம், முதல் விமானத் தொழிற்சாலை, முதல் கார் தொழிற்சாலை போன்றவற்றை நிறுவினார். கட்டுமான நிறுவனங்கள், கரும்பு தோட்டங்கள், சர்க்கரை ஆலைகள், மிட்டாய் ஆலைகள், பொறியியல் நிறுவனங்கள் போன்ற பல வணிகங்களையும் இவர் நிறுவினார். வாரணாசியிலிருந்து இவருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வெற்றிலை பானை இவர் அடிக்கடி சாப்பிடுவார். [1] [2] [3] [4] [5]
குசராத்தின் வான்கானேர் பகுதியைச் சேர்ந்த இவர் குசராத்தி ஜெயின் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் முந்தைய மும்பை மாகாணத்தின் சோலாப்பூரில் குடியேறினார். [1] இவர் திகம்பர ஜெயின் குடும்பத்தில் சோலாப்பூரில் (இப்போது மகாராட்டிரா ) சேத் இராச்சந்த் நேமிசந்த் தோசிக்கும் அவரது முதல் மனைவி ராஜுவிற்கும் பிறந்தார். இராச்சந்த் பருத்தி வர்த்தகத்திலும், பணத்தை கடனாக வழங்கும் தொழிலிலும் ஈடுபட்டிருந்தார். வால்சந்தின் தாய் இவர் பிறந்த சில நாட்களுக்குப் பிறகு இறந்து போனார். இராச்சந்த் பின்னர் சக்குபாய் என்பவரை மணந்தார். சக்குபாயிக்கு குலாப்சந்த், ரத்தன்சந்த், இலால்சந்த் என்ற மூன்று மகன்கள் பிறந்தனர்.
இவர் 1899 இல் சோலாப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தனது மெட்ரிகுலேசனை முடித்த பின்னர் மும்பை புனித சேவியர் கல்லூரியில் பயின்றார். மேலும் மும்பை பல்கலைக்கழகத்திலும் தனது இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் இவர் புனேவிலுள்ள தக்கான கல்லூரியில் பயின்றார். ஆனால் இவரது குடும்பத் தொழிலில் சேர தனது படிப்பை முழுமையடையாமல் விட்டுவிட்டார். [6]
இவர் படித்துக்கொண்டிருந்தபோது, 1900 ஆம் ஆண்டில் சோலாப்பூர் வங்கியாளரின் மகளான ஜியு கிலாச்சந்த் என்பவரை மணந்தார். இந்த திருமணத்தின் மூலம், இவருக்கு சதுர் என்ற மகள் இருந்தாள். ஆனால் இவரது மனைவி பிரசவத்தில் இறந்தார். பின்னர் 1913 இல், குடும்பத்தின் அழுத்தம் காரணமாக, இவர் கஸ்தூர் மேத்தா என்பவரை மணந்தார். இவரது இரண்டாவது திருமணத்தின் மூலம் இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருந்தனர். ஆனால் இருவரும் குழந்தை பருவத்திலேயே இறந்தனர். [6]
தனது தந்தையின் குடும்ப வணிகமான வங்கி வர்த்தகத்திலும் பருத்தி வர்த்தகத்திலும் சில ஆண்டுகள் கழித்தபின், இவர் குடும்ப வியாபாரத்தில் தனக்கு ஆர்வமில்லை என்பதை உணர்ந்தார். முன்னாள் இரயில்வே எழுத்தர் இலட்சுமண்ராவ் பல்வந்த் பதக் என்பவருடன் இணைந்து கட்டுமானத்திற்கான இரயில்வே ஒப்பந்தக்காரரானார்; இந்த கூட்டு பின்னர் பதக்-வால்சந்த் நிறுவனமாக ஆனது. இவர் தான் ஒரு வெற்றிகரமான இரயில்வே ஒப்பந்தக்காரர் என்பதை நிரூபித்தார், ஆனால் மற்ற வணிக யோசனைகளுக்கும் வாய்ப்பளித்தார். [1] [2] [3] [4]
1949 ஆம் ஆண்டில், இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 1950 இல் வணிகத்திலிருந்து ஓய்வு பெற்றார். [1] உடல் நலம் பெறர் இவரது கடைசி ஆண்டுகளில் இவரை மனைவி கஸ்தூர்பாய் நன்கு கவனித்து வந்தார். இவரை மும்பையிலிருந்து குசராத்திலுள்ள இயற்கைச் சூழல் நிறைந்த மத நகரமான சித்பூருக்கு அழைத்துச் சென்றார். இவர் 1953 ஏப்ரல் 8, அன்று சித்பூரில் காலமானார்.