வி. சிவகுமார் V. Sivakumar | |
---|---|
2023-ஆம் ஆண்டில் வி. சிவகுமார் | |
மலேசிய மனிதவள அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 திசம்பர் 2022 | |
ஆட்சியாளர் | சுல்தான் அப்துல்லா |
பிரதமர் | அன்வர் இப்ராகீம் |
Deputy | முசுதபா சக்முட் Mustapha Sakmud |
முன்னையவர் | மு. சரவணன் |
தொகுதி | பத்து காஜா |
துணைச் செயலாளர் ஜனநாயக செயல் கட்சி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 12 நவம்பர் 2017 Serving with நிகா கோர் மிங் (2017–2022) & திரேசா கோக் சு சிம் (2017–2022) & துங்கு சூல்புரி சா ராஜா பூஜி (since 2022) & லிவ் சின் டோங் (since 2022) | |
பொது செயலாளர் | லிம் குவான் எங் (2017–2022) அந்தோனி லோக் சியூ பூக் (since 2022) |
தேசிய தலைவர் | தான் கோக் வாய் (2017–2022) லிம் குவான் எங் (since 2022) |
சபாநாயகர் பேராக் மாநில சட்டமன்றம் | |
பதவியில் 25 ஏப்ரல் 2008 – 7 மே 2009 | |
ஆட்சியாளர் | சுல்தான் அசுலான் சா |
முன்னையவர் | ஜுனுசு வாகிட் |
பின்னவர் | டத்தோ ர.கணேசன் |
தொகுதி | துரோனோ |
மலேசியர் நாடாளுமன்றம் பத்து காஜா | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 5 மே 2013 | |
முன்னையவர் | போங் பூ குவான் (PR–ஜ.செ.க) |
பெரும்பான்மை | 38,410 (2013) 43,868 (2018) 53,836 (2022) |
Member of the [[பேராக் மாநில சட்டமன்றம் சட்டமன்றம்]] துரோனோ | |
பதவியில் 8 மார்ச்சு 2008 – 5 May 2013 | |
முன்னையவர் | லீ கோன் இன் (பாரிசான் நேசனல் - ம.சீ.ச) |
பின்னவர் | பால் யோங் சூ கியோங் (ஜ.செ.க) |
பெரும்பான்மை | 2,571 (2008) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | Sivakumar s/o Varatharaju Naidu 5 திசம்பர் 1970 பேராக் , மலேசியா |
குடியுரிமை | மலேசியர் |
அரசியல் கட்சி | ஜனநாயக செயல் கட்சி (ஜ.செ.க) |
பிற அரசியல் தொடர்புகள் | பாக்காத்தான் ராக்யாட் (PR) (2008–2015) பாக்காத்தான் ஹரப்பான் (PH) (since 2015) |
துணைவர் | ஈஸ்வரி |
பெற்றோர் |
|
முன்னாள் கல்லூரி | மலாயா பல்கலைக்கழகம் |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | சட்டவியல் தொழில் முனைவர் |
வி. சிவகுமார் என அழைக்கப்படும் சிவகுமார் வரதராஜன் (மலாய்: V. Sivakumar; ஆங்கிலம்: Sivakumar s/o Varatharaju Naidu) (பிறப்பு: 5 திசம்பர் 1970) மலேசியா, பேராக், பத்து காஜா தொகுதியின்; ஜனநாயக செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவர்.
இவர் 3 திசம்பர் 2022 முதல் பிரதமர் அன்வர் இப்ராகீம் தலைமையிலான பாக்காத்தான் ஹரப்பான் (Pakatan Harapan) நிர்வாகத்தில்; அன்வார் இப்ராகிம் அமைச்சரவையில் மலேசிய மனிதவள அமைச்சர் பதவிக்குப் பொறுப்பு வகிக்கிறார்.[1][2]
சிவகுமார் 1970-ஆம் ஆண்டு பிறந்தவர். நீதித் தத்துவத் துறை இளங்கலையிலும், வணிக நிர்வாகத் துறை முதுகலையிலும் உயர்க் கல்வியை முடித்த பிறகு, 1997-ஆம் ஆண்டு அரசியலில் காலடி எடுத்து வைத்தார். ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரனிடம் அரசியல் செயலாளராகச் பணிபுரிந்தார்.
பின்னர், 2008-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தின் துரோனோ சட்டமன்றத் தொகுதியில், லீ கிம் சோய் என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டு 2,571 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
13-ஆவது மலேசிய பொது தேர்தலில், சிவகுமார் பத்து காஜா நாடாளுமன்ற தொகுதில் போட்டியிட்டு வென்றார். அவர் மீண்டும் 14-வது மற்றும் 15-வது பொது தேர்தலிலும் பத்து காஜா தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.[3]
2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின், பேராக் மாநிலத்தை ஆட்சி செய்து வந்த பாக்காத்தான் ராக்யாட் இவரை சபா நாயகராக்கியாது. மலேசிய அரசியல் வரலாற்றில் தமிழர் ஒருவர் மலேசிய மாநிலத் சபா நாயகர் பதவி வகிப்பது இதுவே முதல் முறையாகும்.
பேராக் அரசியல் சாசன நெருக்கடியை, சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவல்களினால் ஏற்பட்ட நெருக்கடி என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[4] இந்த நிகழ்ச்சியினால், பேராக் சட்டமன்றத்தில் மக்கள் கூட்டணி, பெரும்பான்மையை இழந்தது. பேராக் அரசியல் சாசன நெருக்கடி 2009க்கு மூலகாரணமாகவும் அமைந்தது.[5] அதன் தொடர்ச்சியாக, அரச சபாநாயகர் வி. சிவகுமாரும் சபாநாயகர் பதவியை இழக்க வேண்டி வந்தது.[6]
இருப்பினும், 2009 பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி, சபாநாயகர் தகுதியில் இருக்கும் நிலையில், பேராக் மாநிலச் சட்டசபையின் அவசரக் கூட்டத்திற்கு வி. சிவகுமார் அழைப்பு விடுத்தார். இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் அந்த அழைப்பில் கோடி காட்டினார்.[7]
அவர் கொண்டு வந்த தீர்மானங்களில், முதல் தீர்மானம்: பேராக் முதலமைச்சர் முகமட் நிஜார் ஜமாலுடின் என்பவர்தான் சட்டபூர்வமான அரசு அதிகாரி என்பதாகும்.[8]
அடுத்து, பேராக் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிதாக ஒரு தேர்தலை நடத்தி ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு வகை செய்ய வேண்டும் என்பது, அவருடைய இரண்டாவது தீர்மானம் ஆகும். சபாநாயகர் வி. சிவகுமாரின் சட்டசபை அவசரக் கூட்ட அழைப்பை பேராக் மாநில சட்ட அறிவுரைஞர் அகமட் கமால் முகமட் ஷாகிட் நிராகரித்தார்.[9]
மாநிலத்தின் அரச ஆளுநரின் அனுமதி இல்லாமல் சட்டசபை அவசரக் கூட்ட அழைப்பை விடுக்க முடியாது என்று காரணம் காட்டினார். அதாவது பேராக் மாநில சுல்தானின் அனுமதி இல்லாமல் சட்டசபை அவசரக் கூட்டத்தை நடத்த முடியாது என்று சட்ட நுணுக்கங்கள் அடையாளம் காட்டப்பட்டன.[10]
அதற்கு சிவகுமாரின் வழக்கறிஞர் அகஸ்டின் அந்தோனி மறுப்பு தெரிவித்தார்.[11] ஒரு சட்டசபையின் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சட்டசபை கலைக்கப்படவில்லை. அதனால், சிவகுமாரின் சட்டசபை அவசரக் கூட்ட அழைப்பு செல்லத்தக்கது. அந்த அழைப்பிற்கு மாநில சுல்தானின் அனுமதி தேவை இல்லை என்று வாதாடினார்.[11]
சட்டசபை அவசரக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னால், 2009 மார்ச் 2ஆம் தேதி மற்றொரு திருப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சட்டசபையின் கட்டிட வேலிக் கதவுகளுக்குப் பூட்டுகளைப் போட்டு பூட்டுமாறு பேராக் மாநிலச் செயலகம் கட்டளை பிறப்பித்தது.
அதே தினம் சிவகுமார் மற்றோர் அறிவிப்பைச் செய்தார். சட்டசபைச் செயலாளரைத் தான் பதவியில் இருந்து அகற்றுவதாகவும், மாநிலச் சட்டசபையின் அவசரக் கூட்டம் திட்டமிட்டபடி 2009 மார்ச் 3ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார்.[12]
சபாநாயகர் சிவகுமாரின் ஆணையின்படி 2009 மார்ச் 3ஆம் தேதி சட்டசபை அவசரக் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சட்டமன்ற உறுப்பினர்களும் கட்டிட வளாகத்திற்குள் வந்து சேர்ந்தனர்.
இந்தக் கட்டத்தில், சட்டசபைக் கட்டிட வளாகத்தில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மக்கள் கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்டிடத்திற்குள் நுழைவதில் இருந்து தடுக்கப்பட்டனர்.[13]
சட்டசபை வளாகத்தில், வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் ஒரு பெரிய மரம் இருந்தது. அந்த மரத்தின் அடியில் அவசர சட்டசபைக் கூட்டம் நடைபெறும் என்று சிவகுமார் உடனடியாக அறிவித்தார். சபாநாயகரின் முழு ஆடை அணிகலன்களுடன் இருந்த சிவகுமார், மரத்தின் அடியிலேயே சட்டசபைக் கூட்டத்தையும் நடத்தினார்.[14]
அதைப் பார்ப்பதற்கு பொதுமக்கள் ஆயிரக் கணக்கில் கூடி நின்றனர். கலைந்து போகுமாறு பொதுமக்களைப் போலீஸார் வன்மைத் தொனியில் கேட்டுக் கொண்டனர். இருப்பினும் பொதுமக்கள் கலையவில்லை.
மரத்தின் கீழ் நடைபெற்ற அந்த அவசர சட்டமன்றக் கூட்டத்தில், 27க்கு 0 எனும் வாக்குப் பெரும்பான்மையில், மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.[15]
மரத்தின் கீழ் சிவகுமார் நடத்திய சட்டசபை அவசரக் கூட்டத்திற்கு எதிராக பாரிசான் நேசனல் ஒரு பகிரங்கக் கண்டனம் தெரிவித்தது. அந்தக் கூட்டத்தில் தங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்றும் அறிவித்தது.
இதற்கிடையில், மக்கள் கூட்டணியின் முதலமைச்சராக இருந்த முகமட் நிஜார் ஜமாலுடின், பேராக் மாநிலச் சட்டசபையைக் கலைத்து விடுமாறு பேராக் மாநில சுல்தான் அஷ்லான் ஷா அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். ஆனால், அந்த வேண்டுகோள் நிறைவேற்றப்படவில்லை.
பேராக் மாநிலச் சட்டமன்ற வளாகத்தில், வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இருந்த அந்த மரத்திற்கு ‘மக்களாட்சி மரம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்போது அந்த மரத்தின் கீழ் ஒரு நினைவுப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.[18]