விபரீதகரணி ஆசனம் யோகக் கலையின் யோகாசனங்களில் ஒன்று. இது கிட்டத்தட்ட சர்வாங்காசனம் போலவே செய்யப்படும். ஆகையால் சர்வாங்காசனம் செய்ததும் இதை அடுத்துச் செய்யலாம். இதிலே கால் மட்டுமே செங்குத்தாகத் தூக்க வேண்டும். உடல் பகுதியைச் சாய்வாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சர்வாங்காசனத்திலோ உடல் முழுதும் தலைகீழாய்க் கொண்டு வருகிறோம்.
ஆரம்பத்தில் இடுப்பைத் தூக்கிப் பிடிக்கச் சிரமமாக இருக்கும். அப்போது இரண்டு மூன்று தலையணைகளை இடுப்புப் பக்கம் முட்டுக் கொடுத்துக்கொண்டு பயிற்சி செய்யலாம். அப்போது கைகளுக்கு வேலை இல்லாததால் அவற்றை இரு பக்கமும் கவிழ்ந்தாற்போல் வைத்துக் கொள்ளலாம். பின்னர் மெல்ல மெல்லத் தலையணையை எடுத்துவிட்டுத் தலையணை இல்லாமல் பயிற்சிகளைச் செய்யலாம்
இந்த ஆசனம் மார்புக்கு நல்லது. சுவாச நோய்களுக்கு நல்லது. சளி, இருமல், காசநோய், ஆஸ்த்மா போன்ற நோய்கள் தலைகாட்டா. நரம்புத் தளர்ச்சி, ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவை வாரா. கழுத்துப் பகுதியில் ரத்த ஓட்டம் ஏற்படுமாகையால் தைராய்டு சுரப்பி நன்கு வேலை செய்யும். கை கால்களுக்கும் இரத்த ஓட்டம் நன்கு ஏற்படும்.
கருவுற்ற பெண்கள் இந்த ஆசனத்தைச் செய்யக்கூடாது.[சான்று தேவை]