வெஸ்ஸகிரிய அல்லது வெஸ்ஸகிரி எனப்படுவது இலங்கையின் பண்டைக்காலத் தலைநகரமான அனுராதபுரத்தின் அழிபாடுகளின் ஒரு பகுதியாக உள்ள ஒரு பழங்காலக் காட்டுத் துறவிமடம் ஆகும். இது இசுருமுனியவுக்குத் தெற்கே அரை மைல் தொலைவில் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. தேவநம்பிய தீசன் (கிமு 3ம் நூ.ஆவின் நடுப்பகுதி) என்னும் மன்னன் காலத்தில் உருவான இது, பின்னர் காசியப்ப மன்னன் (கிபி 473-491) காலத்தில் ஐந்நூறு புத்த துறவிகளுக்கான இருப்பிட வசதிகளைக் கொண்டதாக விரிவாக்கப்பட்டது.[1]
வெஸ்ஸகிரித் துறவிகள், அயலில் காணப்படும் பொருட்களைக் கொண்டு அமைக்கப்பட்ட பாறைகளாலான இருப்பிடங்களில் வாழ்ந்தனர். இவ்வாழிடங்கள் மரம் போன்ற அழியக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தி முடிப்புச் செய்யப்பட்டிருந்தன. இன்று இப்பகுதிக்குச் செல்பவர்கள் எஞ்சியுள்ள பாறைகள் சிலவற்றையே பார்க்க முடியும். அழியக்கூடிய பொருட்கள் அழிந்துவிட, எஞ்சியிருந்த பாறைகளிற் பெரும்பகுதியை பிற்காலத்தில் வேறு தேவைகளுக்காக எடுத்துச்சென்றுவிட்டனர்.[2]
பாறைகளின் மேற்பகுதியில் இவ்விருப்பிடங்களைத் தானமாக வழங்கியவர்களின் பெயர்கள் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன.[3][4]