தி. ஜானகிராமன் (T.Janakiraman, பெப்ரவரி 28, 1921 - நவம்பர் 18, 1982 [1]. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், தேவக்குடி) ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். தி.ஜா. என்றும் அழைக்கப்படுபவர். சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காகத் தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். தமிழின் மிகப்புகழ் பெற்ற நாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள்[2] போன்றவற்றை எழுதியவர்.
தி.ஜா. இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர். தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்துத் தேவங்குடியில் 1921-ஆம் ஆண்டு பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவர்; பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன் பின்னர் தமிழின் முதன்மையான இலக்கிய இதழாக விளங்கிய கணையாழி மாத இதழில், ஆசிரியராகப் பணியாற்றி வந்த தி. ஜானகிராமன் 1982-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு சிறு உடல் நலக் குறைவிற்குப் பிறகு இயற்கை எய்தினார்.
இவர் சமையற்கலையிலும் வல்லவர். இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் முதலியவற்றிலும் ஈடுபாடு மிக்கவர்.
இவர் தஞ்சாவூர் புனித பீட்டர் பள்ளியிலும், சென்ட்ரல் பிரைமரிப் பள்ளியிலும் தொடக்கக் கல்வியையும், 1929 - 1936 வரை கல்யாண சுந்தரம் உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றவர். 1936 - 194 வரை கும்பகோணம் அரசினர் கல்லூரியில் இன்டர்மீடியட்டும், பி.ஏ.வும் பயின்றவர்.
இவர் 1943 - 1944 வரை கும்பகோணம் நகர உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும், 1944 - 1945 வரை சென்னை எழும்பூர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகவும், 1945 - 1954 வரை 9 ஆண்டுகள் தஞ்சை மாவட்டம் ஐயம்பேட்டையிலும், குத்தாலம் பள்ளியிலும் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
இவர் 1945 - 1960 வரை சென்னை வானொலி நிலையத்தில் 14 ஆண்டுகள் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணியாற்றியவர். 1968 - 1974 வரை தில்லி வானொலி நிலையத்தில் உதவித் தலைமை கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணிபுரிந்தவர். பின்பதவி உயர்வு பெற்று 1974 - 1981 வரை தலைமைக் கல்வி அமைப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் வானொலி நிலையங்களில் பணியாற்றியபோது அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா முதலிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.
தனது ஜப்பான் பயண அனுபவங்களை உதயசூரியன் என்னும் தலைப்பில் சுதேசமித்திரன் வார இதழில் எழுதினார். இது 1967-,இல் நூலாக வெளியிடப்பெற்றது. ரோமானிய செக்கோஸ்லோவோக்கியா சென்ற அனுபவங்களைக் கருங்கடலும் கலைக்கடலும் என்னும் தலைப்பில் 1974-இல் வெளியிட்டார்.