சரண் ராணி பாக்லீவால் | |
---|---|
இயற்பெயர் | சரண் ராணி மாத்தூர் |
பிறப்பு | தில்லி | ஏப்ரல் 9, 1929
இறப்பு | ஏப்ரல் 8, 2008 தில்லி | (அகவை 78)
தொழில்(கள்) | இசைக்கலைஞர், இசை அறிஞர் |
இசைக்கருவி(கள்) | சரோத் |
சரண் ராணி பாக்லீவால் என்றறியப்படும் (Sharan Rani Backliwal) (1929 ஏப்ரல் 09 - 2008 ஏப்ரல் 08) இவர், இந்துத்தானி சாத்திரிய சங்கீத மேதையாகவும், புகழ்பெற்ற சரோத் வாத்தியக் கலைஞராகவும், அறியப்படுகிறார். மேலும், சரண் ராணி மாத்தூர் எனும் இயற்பெயர் கொண்ட இவர், சரோத் இசையை உலகம் முழுவதும் பரவச் செய்தமையால் இவருக்கு ‘சரோத் ராணி’.[1] என்ற பெரும்பெயராலும் போற்றப்படுகிறார்.[2][3][4]
சரண் ராணி தில்லியிலுள்ள புகழ்பெற்ற வியாபாரிகள், கல்வியாளர்களின் குடும்பத்தில் 1929-ம் ஆண்டு ஏப்ரல் 09-ல் பிறந்தார். இசை மரபு அல்லாத குடும்பம் என்றாலும், தங்கள் மகள் அதில் சாதிக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் விரும்பினர். சிறு வயதிலேயே உத்தாத் அலாவுதீன் கான், அவரது மகனான இந்துஸ்தானி இசைக் கலைஞரும் சரோத் வாத்தியக் கலைஞருமான உத்தாத் அலி அக்பர் கான் உள்ளிட்ட மேதைகளிடம் சரோட் கற்றார். பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு தில்லி பல்கலைக்கழகத்தின் இந்திரபிரஸ்தா மகளிர் கல்லூரியில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். கதக், மணிப்புரி நடனமும் பயின்றார். இசை, நடனம் இந்த இரண்டில் எதை தேர்ந்தெடுப்பது என்று குழம்பியவர். இறுதியில் இசையையே தேர்வு செய்தார்.[4]
இந்திய விடுதலைப் போராட்டங்களில் கலந்துகொண்ட ராணி பாக்லீவால், மேடைக் கச்சேரிகளில் 1930-ம் ஆண்டு முதல் சரோத் வாசித்து வந்தவர். ஆண்கள் மட்டுமே வாசித்து வந்த சரோத் இசையில் வல்லமை பெற்ற அவர், 1950-களில் வெளிநாடுகளில் ஏராளமான கச்சேரிகள் வழங்கினார். உலகம் முழுவதும் உள்ள பிரபல இசையரங்குகளில் கச்சேரிகள் நடத்தியவர், இசைக் கலைஞர் என்ற வகையில் உலகலளாவிய பயணம் செய்த முதல் இந்தியப் பெண்மணியாவார்.[4]
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இசை நிறுவனங்களுடன் இணைந்து யுனெஸ்கோ அமைப்புக்காக சரோத் இசை பதிவு செய்தவர். இவரது கச்சேரிகளை சனாதிபதிகள், பிரதமர்கள், மன்னர்கள், ராணிகள் மற்றும் பல நாடுகளின் தலைவர்கள் ரசித்துள்ளனர். குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் இசை நிகழ்ச்சி நடத்த எப்போதும் தயாராக இருக்கும் இவர். தொண்டு நிறுவனங்களுக்காக பல நிகழ்ச்சிகளை கொடையாக நடத்துபவர். வளரும் கலைஞர்களுக்கும், வறிய நிலையில் உள்ள கலைஞர்களுக்கும் விளம்பரமின்றி பல உதவிகளை செய்துள்ளார்.[4]
சரோத் இசையின் வரலாறு குறித்த நூலை எழுதிய சரண் ராணி, இசை பற்றி பல கட்டுரைகளையும் தொகுத்தவர். இசை சம்பந்தமாக உலகின் பல முக்கிய நகரங்களில் ஏராளமான விரிவுரைகள் நிகழ்த்தியுள்ளார்.[1] குரு-சிஷ்ய மரபு முறைப்படி இசை கற்றுக் கொடுத்தார். பல மாணவர்கள் இவரது வீட்டில் ஆண்டுக்கணக்கில் தங்கியிருந்து இசை பயின்றனர். ஆனால், ஒருவரிடம்கூட இவர் கட்டணம் வாங்கியதே இல்லை. இந்தியாவின் கலைப் பண்பாடு, பாரம்பரியப் பெருமை அடுத்தடுத்த தலைமுறைக்கும் செல்லவேண்டும் என்ற நோக்கில், தொன்மையான, அரிதான 15-ம் நூற்றாண்டு முதல் 20-ம் நூற்றாண்டு வரையிலான ஏறக்குறைய 450 [1] வாத்தியங்களை சேகரித்தார். அவற்றை தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்துக்கு நன்கொடையாக வழங்கினார்.[1]
உலகம் முழுவதும் உள்ள பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளன. ‘இந்தியாவின் கலாச்சாரத் தூதர்’ என ஜவகர்லால் நேருவால் புகழாரம் சூட்டப்பட்டவர். சரோட் இசையை உலகம் முழுவதும் பரவச் செய்தவரும், ‘சரோட் ராணி’ என போற்றப்பட்டவருமான சரண் ராணி பாக்லீவால் 2008 ஏப்ரல் 8-ம் நாள் தனது 79-வது வயதில் மறைந்தார்.[4]
விருதுகள் மற்றும் அவர் பெற்ற கவுரவங்கள்.
{{cite web}}
: Check date values in: |date=
(help)