பிரகார் | |
---|---|
![]() பிரகார் (குறுந்தொலைவு புவியீர்ப்பிலான ஏவுகணை) | |
வகை | போர்த்தந்திர புவியீர்ப்புபாதை ஏவுகணை |
அமைக்கப்பட்ட நாடு | இந்தியா |
பயன்பாடு வரலாறு | |
பயன் படுத்தியவர் | இந்தியத் தரைப்படை இந்திய வான்படை |
உற்பத்தி வரலாறு | |
தயாரிப்பாளர் | பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) |
அளவீடுகள் | |
நீளம் | 7.3 மீட்டர்கள் |
விட்டம் | 0.42 மீட்டர் |
வெடிபொருள் | 200 கிலோகிராம் |
உந்துபொருள் | திடப்பொருள் |
இயங்கு தூரம் | 150 கிமீ |
வேகம் | மாக் 2.03 (2160 கிமீ/ம) |
ஏவு தளம் | 8 x 8 டாடா போக்குவரத்து நிமிர்த்தி ஏவு உந்து (Transporter Erector Launcher) |
பிரகார் (Prahaar, சமசுகிருதம்:प्रहार, தாக்கு) இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பினால் வடிவமைக்கப்பட்டுள்ள திட எரிபொருளைக் கொண்டியங்கும் ஓர் தரைக்குத் தரையிடை குறுந்தொலைவு புவியீர்ப்புப்பாதை ஏவுகணை ஆகும். இதில் பல திசைகளிலும் வெடிக்கும் போர்த்தளவாடங்கள் பொருத்தப்பட்டு தந்திர மற்றும் முகனையான இலக்குகளைத் தாக்கவியலும். [1] ஒரே நேரத்தில் எல்லாத் திசைகளிலும் ஆறு இலக்குகளை இந்த ஏவுகணை தாக்கவல்லது. 200 கிலோ வரையிலான வெவ்வேறு வகை வெடிபொருள்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்டது.[2]
இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் இந்த ஏவுகணையை டிஆர்டிஓ உருவாக்கியுள்ளது. 150 கிமீ தொலைவிலுள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய இந்த ஏவுகணை நீண்ட தூர ஏவுகணைகளுக்கும் மத்திய தொலைவு ஏவுகணைகளுக்கும் இடையேயான இடைவெளியை போக்கும். சாலையோர ஏவுகணை உந்திலிருந்து ஏவக்கூடியத் தன்மை போர்ந்திரத்திற்கான மற்றும் முக்கியமான இலக்குகளை தாக்க இராணுவத்திற்கு உதவியாக உள்ளது.
ஒப்பீட்டளவில் மற்ற ஏவுகணைகளைக் காட்டிலும் செலவு குறைவு. எல்லா வகையான கால நிலைகளிலும் இலக்குகளைத் தாக்கக் கூடியது. போர்களத்தில் மிகவும் துல்லியமாகவும், விரைவாகவும் செயல்பட வல்லது.திட எரிபொருளைப் பயன்படுத்துவதால் திரவ எரிபொருளைப் பயன்படுத்தும் பிரித்வியை விட விரைவாக ஏவக்கூடியது.
சூலை 21, 2011 அன்று ஒரிசா மாநிலத்தின் கடல் பகுதியில் உள்ள சண்டிப்பூரில் இந்த ஏவுகணையின் முதல் சோதனையோட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.[3][4][5] இந்தச் சோதனையின்போது 150 கிமீ தொலைவில் வங்காள விரிகுடாவில் அமைக்கப்பட்டிருந்த இலக்கை 250 வினாடிகளில் அடைந்தது.[6][7]