மைக்கேல் மதன காமராஜன் | |
---|---|
![]() | |
இயக்கம் | சிங்கீதம் சீனிவாசராவ் |
தயாரிப்பு | மீனா பஞ்சு அருணாசலம் (P. A. ஆர்ட்ஸ் தயாரிப்பு) |
கதை | காதர் கஷ்மீரி |
திரைக்கதை | கமல்ஹாசன் |
வசனம் | கிரேசி மோகன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கமல்ஹாசன் ஊர்வசி ரூபிணி குஷ்பூ நாகேஷ் டெல்லி கணேஷ் |
ஒளிப்பதிவு | பி. சி. கௌரிசங்கர் |
படத்தொகுப்பு | டி. வாசு |
கலை | பெக்கட்டி ரெங்காராவ், அசோக் |
நடனம் | பிரபுதேவா, லலிதா மணி (பேர் வைச்சாலும்) |
வெளியீடு | 17 அக்டோபர் 1990 |
ஓட்டம் | 162 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மைக்கேல் மதன காமராஜன் (Michael Madana Kama Rajan) 1990இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஊர்வசி, குஷ்பூ, நாகேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். முழுநீள நகைச்சுவைத் திரைப்படமான இதில் கமல்ஹாசன் நான்கு வேடங்களில் (திருடன் மைக்கேல், தொழிலதிபர் மதனகோபால், சமையல்காரன் காமேஷ்வரன் மற்றும் தீயணைப்பு வீரர் ராஜு) நடித்திருப்பது இப்படத்தின் சிறப்பு.[1][2]
இத்திரைப்படத்தின் மூலக்கதை காதர் கஷ்மீரி எழுதியுள்ளார். திரைக்கதை கமல்ஹாசன் மற்றும் வசனம் கிரேசி மோகன் எழுதியுள்ளனர்.
பிரபுதேவா இப்படத்தில் முதன் முறையாக நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். இதற்கு முன் ஒரு சில பாடலுக்கு மட்டும் நடன ஆசிரியராக பணியாற்றினாலும், இப்படத்தின் மூலமே ஒரு முழுபடத்துக்கான முதன்மை நடன இயக்குநராக பணியாற்றினார். எஸ். பிரபு எனும் பெயரில் அறிமுகமானார்.
பாடல்கள் இளையராஜாவால் இசை அமைக்கப்பட்டன. சுந்தரி நீயும் எனும் பாடல் மலையாள மொழியில் புனையப்பட்டது. இதுவே இந்திய திரைப்பட வரலாற்றிலேயே மெதுவாக இயக்கப்பட்ட (slow motion) பாடல் ஆகும்.[3]
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் பாடல் முதலில் கே.ஜே.யேசுதாஸ் பாடுவதாக இருந்தது, அவரது தேதி கிடைக்காததால் கமல்ஹாசனையே பாடவைத்து வெற்றி பெறச் செய்தார் இளையராஜா. ஆடிப்பட்டம் தேடிச் சம்பா விதை போடு என்ற பாடல் படத்தின் நீளம் கருதி படத்தில் இடம் பெறவில்லை.[4]
பேரு வச்சாலும் வைக்காம போனாலும் என்னும் பாடலின் மெட்டமைக்கும் பொழுது மெட்டு அமைத்துவிட்டு இளையராஜா டட்டகாரத்தை வாலி அவர்களுக்கு பாடி காண்பித்த பொழுது வாலி அவர்கள் இதற்கு எப்படி பாடல் எழுதுவது என்று கூறியுள்ளார். பின்னர் இளையராஜா அவர்கள் "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்.. தூஉம் மழை" என்னும் திருக்குறளைப்பாடி இப்பாடிலின் மெட்டின் சந்தத்தை விளக்கியுள்ளார். பின்னர் வாலி அவர்கள் பேரு வச்சாலும் வைக்காம போனாலும் பாடல் வரிகளை எழுதி கொடுத்துள்ளார். இப்பாடலை பின்னாளில் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா டிக்கிலோனா (2021) திரைப்படத்தில் மறுஆக்கம் செய்து அமைத்துள்ளார்.[5]
மைக்கேல் மதன காமராஜன் | |
---|---|
திரைப்பாடல்கள்
| |
வெளியீடு | 30 சூன் 1990c |
இசைப் பாணி | திரை இசைப்பாடல்கள் |
இசைத்தட்டு நிறுவனம் | எகோ ரிகார்டிங் கம்பெனி |
எண். | பாடல்கள் | பாடகர்கள் | பாடலாசிரியர் | குறிப்பு |
1 | கத கேளு கத கேளு... | இளையராஜா | பஞ்சு அருணாசலம் | |
2 | ரம் பம் பம் ஆரம்பம்... | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | வாலி | |
3 | சிவராத்திரி... | கே. எஸ். சித்ரா, மனோ | வாலி | |
4 | சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்... | கமல்ஹாசன், எஸ். ஜானகி | பஞ்சு அருணாசலம் | இப்பாடல் இருமுறை அதன் அசல் வேகத்தில் படப்பிடிப்பு செய்யப்பட்டது |
5 | பேரு வச்சாலும் வைக்காம போனாலும்... | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | வாலி | |
6 | மாத்தப்பூ ஒரு பெண்ணா... | எஸ். ஜானகி | வாலி | படத்தின் நீளம் கருதி பாடல் படத்தில் இடம் பெறவில்லை. |
7 | ஆடிப்பட்டம் தேடிச் சம்பா... | மனோ, எஸ். ஜானகி | வாலி | படத்தின் நீளம் கருதி பாடல் படத்தில் இடம் பெறவில்லை. |
இப்படம் 17 அக்டோபர் 1990 தீபாவளி பண்டிகை அன்று வெளியானது. இத்திரைப்படம் 175 நாட்கள் மேல் ஓடி வெள்ளிவிழா கொண்டாடியது. தெலுங்கு மொழியில் இப்படம் மைக்கேல் மதன காமராஜூ எனும் பெயரில் 7 மார்ச் 1991 அன்று ஆந்திரா மாநிலத்தில் வெளியானது.