ஷோபா சந்திரசேகர் (Shoba Chandrasekhar) என்பவர் இந்தியப் பின்னணிப் பாடகர் , எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் ஆவார். இவர் திரைப்பட நடிகர் விஜயின் தாய் ஆவார்.
ஷோபா சந்திரசேகர் அக்டோபர் 24, 1948 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளரான எஸ். ஏ. சந்திரசேகர் என்பவரைத் திருமணம் செய்தார். மேலும் தமிழகத் திரைப்படத் துறையின் முக்கியக் கதாநாயகர்களில் ஒருவராகக் கருதப்படுபவரான விஜய் இவருடைய மகன் ஆவார். இவரின் மகள் வித்யா இரண்டு வயதாக இருக்கும் போது மரணமடைந்தார். சுந்தர், எஸ். என். சுரேந்தர் எனும் சகோதரர்களும் மற்றும் ஷீலா எனும் சகோதரியும் உள்ளனர். இவர்களுடன் இணைந்து லலிதாஞ்சலி எனும் நவின் கலைகள் அமைப்பைத் துவங்கினார். தனது தாயாரின் லலிதா எனும் பெயரில் இதனைத் துவங்கினார் [1] தனது பதினோராம் வயதில் வடபழனி முருகன் கோயில் மேடை நிகழ்ச்சியில் இவர் பங்குபெற்றார் .[2]
துவக்கத்தில் ஸ்ரீ மீனாட்சி என்பவரிடம் இசை கற்றார். பின் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு சிறந்த இசை ஆசானாக கருதப்படும் வித்வான் ஸ்ரீ டி. எம். தியாகராஜன் போன்றவர்களிடம் இசை பயினறார். மேலும் இதே கல்லூரியில் கல்பகம் சுவாமிநாதனிடம் வீணை பயின்றார். கடந்த ஐந்து வருடங்களாக மகாராஜபுரம் சந்தானத்தின் மகளான பிருந்தா தியாகராஜனிடம் கருநாடக இசை பயின்று வருகிறார்.[1]
எஸ்தெல் உணவகம் மற்றும் பொழுதுபோக்கும் இடமானது ஷோபா சந்திரசேகருக்கு வாழ்நாள் சாதனையாளர் திருமதி சென்னை எனும் விருதினை வழங்கியது. ஒரு பாடகராக மட்டும் அல்லாது சென்னையில் கொடை உள்ளத்துடன் சேவை செய்ததற்காகவும், ஒரு நல்ல தாயாகவும், மனைவியாகௌம்வ் இருந்ததற்காகவும் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது.[1]
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா கலை பண்பாட்டிற்கான ஆலோசகராக ஷோபா சந்திரசேகரை நியமனம் செய்தார்.[3]
இவர் மெல்லிசை இசைக்குழுவில் பாடகராக உள்ளார். இவரின் முதல் மெல்லிசை இசை நிகழ்ச்சியான சமர்ப்பணம், விஜய் தொலைக்காட்சியில் 2003 ஆம் ஆண்டில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பின் திரைப்படங்களில் பின்னணிப் பாடகர் ஆனார். மேலும் இவர் எழுதிய சில கதைகளை இவரின் கணவர் மற்றும் திரைப்பட இயக்குநரான எஸ். ஏ. சந்திரசேகர் திரைப்படமாக உருவாக்கினார். சில திரைப்படங்களைத் தயாரித்தது மட்டுமின்றி சில படங்களை இயக்கியுமுள்ளார். பல மேல்நாட்டுச் செந்நெறி இசைக் கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார். அண்மையில் ஆனைமுகமும் ஆறுமுகனும் எனும் பெயரில் பக்திப்பாடல் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். தனது முதல் பாடல் தொகுப்பான சமர்ப்பணம் மற்றும் ஆனைமுகமும் ஆறுமுகனும் எனும் பாடல் தொகுப்பானது கைலாசம் பாலசந்தர், எம். சரவணன், சுதா ரகுநாதன், வீணை காயத்ரி ஆகியவர்களால் பாரட்டப்பட்டதாக ஷோபா தெரிவித்துள்ளார்.[2]
மஹாராஜபுரம் சந்தானம் தொண்டு நிறுவனத்திற்கான நிகழ்ச்சியில் முதன்முறையாக நேரலை இசைநிகழ்ச்சியினை நிகழ்த்தினார். இவரின் முதல் திரைப்படப் பாடல் இருமலர்கள் எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற "மகாராஜா ஒரு மகாராணி" எனும் பாடலாகும். இவரின் கணவரான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய பெரும்பான்மையான திரைப்படங்களில் இவர் பின்னணிப் பாடகராக பணிபுரிந்துள்ளார்.