சேர் பொன்னம்பலம் அருணாசலம் | |
---|---|
![]() | |
இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1912–1913 | |
இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1912–1913 | |
இலங்கை தேசிய காங்கிரஸ் தலைவர் | |
பதவியில் 1919–1920 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பொன்னம்பலம் அருணாசலம் 14 செப்டம்பர் 1853 கொழும்பு, இலங்கை |
இறப்பு | 9 சனவரி 1924 மதுரை, இந்தியா | (அகவை 70)
துணைவர் | சுவர்ணம் நமசிவாயம் |
பிள்ளைகள் | பத்மநாபன், அருணாசலம் மகாதேவா, அருணாசலம் இராமநாதன், மகேஸ்வரி செகராசசிங்கம், மனோன்மணி பத்மநாதன், பத்மாவதி பரராஜசிங்கம், சிவானந்தம் தம்பையா, சுந்தரி நடராஜா |
பெற்றோர் | பொன்னம்பல முதலியார், செல்லாச்சி |
உறவினர் | சேர் முத்து குமாரசுவாமி (தாய் மாமன்} சேர் பொன் இராமநாதன் (தமையனார்) |
முன்னாள் மாணவர் | கிறைசுட்டு கல்லூரி, கேம்பிரிட்ச், கொழும்பு றோயல் கல்லூரி |
பணி | அரச ஊழியர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
பொன்னம்பலம் அருணாசலம் (Ponnambalam Arunachalam; 14 செப்டம்பர் 1853 – 9 சனவரி 1924) சேர் பொன். அருணாசலம் எனப் பொதுவாக அறியப்பட்டவர். இவரது காலத்தில் இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர்.
பொன்னம்பலம் அருணாசலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள மானிப்பாயைச் சேர்ந்த இராசவாசல் முதலியார் (கேட் முதலியார்) என அழைக்கப்பட்ட பொன்னம்பல முதலியாருக்கும் செல்லாச்சி அம்மையாருக்கும் (சேர் முத்து குமாரசுவாமியின் சகோதரி) மூன்றாவது மகனாக 1853 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி கொழும்பு நகரில் பிறந்தார்.[1][2][3] குமாரசாமி முதலியார், சேர். பொன். இராமநாதன் ஆகியோர் இவரது சகோதரர்கள்.[4]
இவரது தாய் மாமனாரான சேர். முத்துக்குமாரசுவாமியின் கண்காணிப்பில் கொழும்பிலேயே வளர்ந்தார். கொழும்பு றோயல் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.[1][5] இங்கு கல்வி கற்றபோது 1870 இல் இராணி புலமைப்பரிசிலையும் பெற்று, லண்டன் கேம்பிரிச் பல்கலைக்கழகத்தின் கிறைஸ்ட் கல்லூரியில் இளங்கலைமானிப் பட்டம் பெற்றார்.[1][6] 1880 இல் கேம்பிட்சுப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.[1][3][6] பவுண்டேஷன் புலமைப்பரிசிலைப் பெற்று கணிதத்திலும் புராதன இலக்கியத்திலும் சிறந்த சித்திகளைப் பெற்றார்.
இவரது மனைவியின் பெயர்: சுவர்ணம் நமசிவாயம். அவரும் மானிப்பாயைச் சேர்ந்தவர். எட்டு பிள்ளைகள்: பத்மநாபன், அருணாசலம் மகாதேவா, அருணாசலம் இராமநாதன் ஆகிய ஆண்பிள்ளைகள், மகேஸ்வரி செகராசசிங்கம், மனோன்மணி பத்மநாதன், பத்மாவதி பரராஜசிங்கம், சிவானந்தம் தம்பையா, சுந்தரி நடராஜா ஆகிய ஐந்து பெண்பிள்ளைகள். இவர்களில் பத்மநாபன், மகேஸ்வரி, மனோன்மணி, பத்மாவதி ஆகியோர் அருணாசலம் மறைவதற்கு முன்பே இறந்து விட்டனர்.[1]
இங்கிலாந்தில் பாரிஸ்டர் ஆகவும் 1875 ஏப்ரலில் சிவில் சேவை உத்தியோகத்தேர்வில் சித்தி பெற்ற முதல் இலங்கையராகவும் இலங்கை திரும்பினார். 1913 ஆம் ஆண்டு வரை அரசாங்க சேவையில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தார்.[1][3][6]
முதலில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் பணியாற்றிய இவர் கண்டி காவல்துறை நீதிமன்றத்திலும் தொடர்ந்து இலங்கையின் பல பகுதிகளிலுமுள்ள நீதிமன்றங்களிலும் அலுவலராகப் பணிபுரிந்தார். இவ்வனுபவம் காரணமாக மட்டக்களப்பில் மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றும் சந்தர்ப்பமும் இவருக்குக் கிடைத்தது. இவ் அனுபவத்தைப் பயன்படுத்தி சிவில் சட்டச் சுருக்கம் என்ற நூலை எழுதினார். மாவட்ட நீதிபதி பதவி வகித்த காலத்தில்தான் அப்போது தேசாதிபதியாக இருந்த சேர் ஆர்தர் கோர்டன் இவரைப் பதிவாளர் நாயகமாக (1888–1902) நியமித்தார். பல்வேறு நுணுக்கங்களுடனான குடிசன மதிப்பீட்டு முறையினை அறிமுகப்படுத்தினார். இப்பதவியை வகித்த காலத்திலேயே சட்ட சபையில் உத்தியோகப்பற்றற்ற உறுப்பினராகவும் விளங்கினார்.[3][6]
1913 ஆம் ஆண்டு தனது 60 ஆவது வயதில் அருணாசலம் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வுபெற்றார். இவரது அரசாங்க சேவையைப் பாராட்டி ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் பக்கிங்காம் அரண்மனையில் வைத்து இவருக்கு சேர் பட்டம் வழங்கினர்.[7][8][1][6][9][10]
அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து அருணாசலம் அரசியலில் நுழைந்தார். சட்ட நிரூபண சபையில் சேர் பொன் இராமநாதனுக்குப் பின் உறுப்பினராக இருந்தார். அரசாங்க சேவையில் பணியாற்றும் காலத்திலேயே சுயராஜ்ய (தன்னாட்சி) உணர்வால் உந்தப்பெற்றார். தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காக 1915 ஜனவரி 29 ஆம் திகதி சமூகச் சேவை சங்கத்தினை உருவாக்கினார். அதன் தலைவராகவும் பொறுப்பேற்றார். 1915 ஆம் ஆண்டு சிங்கள, முஸ்லிம் கலவரத்தைத் தொடர்ந்து தேசிய இயக்க அரசியலிலும் தன்னை ஈடுபடுத்தினார்.
தேசிய இயக்க அரசியலுக்காக 1917 டிசம்பரிலும், 1918 டிசம்பரிலும் இரு மாநாடுகளை ஒழுங்கு செய்தார். 1919 ஜூன் 25 ஆம் திகதி இலங்கைத் தொழிலாளர் சேமாவிருத்திச் சங்கத்தை உருவாக்கினார். இதன் தலைவராக அருணாசலமும் செயலாளராக பெரி. சுந்தரமும் பதவியேற்றனர். இச்சங்கம் 1920 இல் இலங்கைத் தொழிலாளர் சம்மேளனமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[1]
1919 டிசம்பர் 11 இல் அருணாசலத்தின் முயற்சியினால் இலங்கையின் முதலாவது தேசிய இயக்கமான இலங்கைத் தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. அதன் முதலாவது தலைவராகவும் 1919 முதல் 1922 வரை பொன்னம்பலம் அருணாசலமே ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். தமிழர்களை தேசிய காங்கிரசுடன் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையில் இவரே நடுவராகத் தொழிற்பட்டார். எழுத்து வடிவில் ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்திடப்பட்டது.[1]
1921 ஆம் ஆண்டு மானிங் அரசியல் சீர்திருத்தத்தின் அடிப்படையிலான தேர்தலில் பிரதிநிதிகளைக் தெரிவு செய்யும் முறை இனவிகிதாசாரப் படி இருக்கவேண்டுமென்பதாலும், கொழும்பு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை சேர். ஜேம்ஸ் பீரிஸ், நு. து. சமரவிக்கிரம போன்ற சிங்கள தலைவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததாலும், சிங்களவர் தங்களைத் தெரிவு செய்யமாட்டாரகள் என்பதனைப்புரிந்து கொண்டு இலங்கைத் தேசிய காங்கிரசிலிருந்து வெளியேறினார். 1921 ஆகத்தில் தமிழர் அடையாள அரசியலை நிலைநிறுத்தும் வகையில் தமிழர் மகாஜன சபையினை உருவாக்கினார். அதன் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.
தமிழர் அடையாள அரசியலில் அருணாசலத்தின் ஆளுமையை முழுமையாகப் பெற முடியவில்லை. அதற்கு முன்னரே அவர் 1924 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி தனது 71 ஆவது வயதில் மதுரை மீனாட்சியம்மன் ஆலயப் பிரதேசத்தில் காலமானார்.[1]
பொன்னம்பலம் அருணாசலத்தின் மகன் அருணாசலம் மகாதேவா பிற்காலத்தில் சிறந்த அரசியல்வாதியாக விளங்கினார். அருணாசலம் கேட்ட கொழும்புத் தமிழ்ப் பிரதிநிதித்துவம் மகாதேவாவிற்கே கிடைத்திருந்தது. டொனமூர் அரசாங்க காலத்தில் சிறிது காலம் அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார். 1947 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் ஜி. ஜி. பொன்னம்பலத்திற்கு எதிராகப் போட்டியிட்டு அவரிடம் தோல்வியடைந்தார்.
1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் திகதி அரசாங்க சபை மைதானத்தில் (தற்போதைய ஜனாதிபதி செயலகம்) தேசாதிபதியால் அருணாசலத்தின் வெண்கலச்சிலை திறந்துவைக்கப்பட்டது. இவரது உருவப்படங்கள் றோயல் கல்லூரி சமூக சேவைச் சங்கம், இலங்கைத் தேசிய காங்கிரசின் தலைமை அலுவலகம் என்பவற்றில் திறந்துவைக்கப்பட்டன. பேராதனைப் பல்கலைக்கழக மண்டபம் ஒன்றிற்கு அருணாசலத்தின் பெயரும் சூட்டப்பட்டது.
இவை தவிர திருக்கோவையார், கல்லாடம், திருமுருகாற்றுப்படை, ஞானவாசிட்டம், புறநானூறு என்பவற்றிலிருந்தும் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார்.