கர்பால் சிங் | |
---|---|
பிறப்பு | கர்பால் சிங் Karpal Singh 28 சூன் 1940 ஜோர்ஜ் டவுன், நீரிணைக் குடியேற்றம் |
இறப்பு | 17 ஏப்ரல் 2014 வடக்கு தெற்கு நெஞ்சாலை(வடக்கு பாதை), 301.6 கிமீ, பேராக் | (அகவை 73)
இறப்பிற்கான காரணம் | சாலை விபத்து |
மற்ற பெயர்கள் | ஜெலுத்தோங் புலி |
இனம் | மலேசிய இந்தியர் |
கல்வி | செயின்ட் சேவியர் பள்ளி ஜோர்ஜ் டவுன், பினாங்கு |
படித்த கல்வி நிறுவனங்கள் | சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் |
அறியப்படுவது | முன்னாள் தேசியத்தலைவர் ஜனநாயக செயல் கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் வழக்குரைஞர் |
அரசியல் இயக்கம் | ஜனநாயக செயல் கட்சி |
சமயம் | சீக்கியம் |
வாழ்க்கைத் துணை | குர்மிட் கோர் |
பிள்ளைகள் | ஜக்டீப் சிங் டியோ கோவிந்த் சிங் தியோ ராம் கர்பால் சங்கீத் கோர் மான் கர்பால் |
கர்பால் சிங் (பஞ்சாபி மொழி: ਕਰਪਾਲ ਸਿੰਘ; சூன் 28, 1940 - ஏப்ரல் 17, 2014) என்பவர் மலேசியாவில் ஒரு மூத்த அரசியல்வாதி; ஒரு பிரபலமான வழக்குரைஞர்.[1][2] 1978 இல் இருந்து 1999 வரை ஜோர்ஜ் டவுன், பினாங்கு ஜெலுத்தோங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2004 ஆம் ஆண்டில் இருந்து, புக்கிட் குளுகோர் ஜோர்ஜ் டவுன், பினாங்கு நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராகவும், 29 ஆண்டுகளாகச் சேவையாற்றி வந்தார். இவர் ஜனநாயக செயல் கட்சியின் முன்னாள் தேசியத்தலைவர் அவார். கர்பால் சிங் 17 ஏப்ரல் 2014 அதிகாலையில் நடந்த ஒரு கோர சாலை விபத்தில் கொல்லப்பட்டார்.[3]
மலேசிய நாடாளுமன்றத்திலும், மலேசிய நீதிமன்றங்களிலும் வாதத்துக்கிடமான மனிதராகப் பெயர் பெற்ற இவர், பலமுறை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளார்.[4][5][6] அரசாங்க விரோதக் கருத்துகள் எனக் கருதப்படும் காரணங்களுக்காக, இவர் 1987 ஆம் ஆண்டு, மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கமுந்திங் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.[7] மலேசியாவில் இவருக்கு ஜெலுத்தோங் புலி எனும் அடைமொழிப் பெயரும் உண்டு.[1]
மலேசியாவில் பல பிரபலமான உயர்மட்ட அரசியல், போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் வாதாடியுள்ள இவர், அன்வர் இப்ராகிம் பாற்புணர்ச்சி வழக்கில் எதிர்த்தரப்பின் தலைமை வழக்குரைஞராகவும் பொறுப்பேற்று இருந்தார். மலேசியாவில் போதைப் பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை வழங்கப்படுவதை இவர் எதிர்த்துப் போராடி வந்தார்.[8]
கர்பால் சிங், பினாங்கு, ஜோர்ஜ் டவுன் புறநகர்ப் பகுதியில் ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தந்தையாரின் பெயர் ராம் சிங். இவர் இந்தியா, பஞ்சாப், அம்ரித்சர் நகருக்கு அருகில் உள்ள சாம்னா பிந்த் எனும் இடத்தில் இருந்து, மலாயாவுக்கு வந்தவர். அவர் பினாங்கில் ஒரு தொழிற்சாலையில் பாதுகாவலராக வேலை செய்து வந்தார். குடும்ப வருமானம் குறைவாக இருந்ததால், சில பசுமாடுகளையும் வளர்த்து வந்தார்.
பினாங்கு செயிண்ட் சேவியர் பள்ளியில், கர்பால் சிங் தன் கல்வியைத் தொடங்கினார். பள்ளி விட்டு வந்ததும் அவர் மாடு மேய்க்கப் போய்விடுவார். அப்படி மாடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லும் போதுதான், அவருடைய மனைவி குர்மிட் கவுரையும் சந்தித்தார். சின்ன வயதிலேயே இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது.
பினாங்கில் தன் உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்ட கர்பால் சிங், பல்கலைக்கழகப் படிப்பிற்காக சிங்கப்பூர் சென்றார். அங்கு சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் சேர்ந்து பட்டப்படிப்பை மேற்கொண்டார்.
சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது மாணவர் சங்கத்தின் தலைவராகவும் சேவை செய்தார். அந்தக் காலகட்டத்தில் மாணவர்கள் அரசியலில் அணி சேரக்கூடாது என்று பணிக்கப்பட்டதால், அதற்கு கர்பால் சிங் எதிர்ப்பு தெரிவித்தார். அதனால், அவர் பல்கலைக்கழக மாணவர்களின் தங்கும் விடுதிகளில் நுழைவதில் இருந்து தடை செய்யப்பட்டார்.[9]
1969 ஆம் ஆண்டு, பினாங்கு வழக்கறிஞர் மன்றத்தில் சேர்க்கப்பட்டார். பின்னர், கெடா, அலோர் ஸ்டார் நகரில் ஒரு வழக்குரைஞர் நிறுவனத்தில் சேவை செய்யத் தொடங்கினார். 1970 இல் தன் சொந்த நிறுவனத்தையும் தொடங்கினார்.
கர்பால் சிங், பல சிக்கலான வழக்குகளிலும் மனித உரிமைகளுக்காகப் போராடுவதிலும் தன் திறமைகளைக் காட்டி பொது மக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.[10] அரசாங்கம் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை அதிகமாகப் பயன்படுத்தி வருவதற்கு கர்பால் சிங் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் 14 வயது சிறுவன் தூக்கிலிடப்படுவதைத் தன் வாதத் திறமையாலும் தடுத்து நிறுத்தியுள்ளார்.[10]
1987 இல் மலேசியப் பிரதமராக இருந்த மகாதீர் பின் முகமது, நாடு தழுவிய நிலையில் லாலாங் நடவடிக்கை எனும் கைது நடவடிக்கையை மேற்கொண்டார். அதற்கு கர்பால் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கடைசியில் அவரையும் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள், 1989 ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகளுக்கு அவர் கமுந்திங் சிறையில் வைக்கப்பட்டார்.[11]
அவர் கமுந்திங் சிறையில் இருக்கும் போது, அவரை விடுதலை செய்யக் கோரி மலேசிய உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. ஆனால், அவர் விடுதலை பெற்ற சில மணி நேரங்களில் மறுபடியும் கைது செய்யப்பட்டார். அவரை மனச்சான்று சுதந்திரம் பெற்ற மனிதர் என்று பன்னாட்டு பொதுமன்னிப்பு அமைப்பு அறிவித்தது. மலேசிய அரசாங்கத்திடம் பகிங்கரமான கண்டனத்தையும் தெரிவித்தது.[12]
கமுந்திங் சிறைச்சாலையில் அவர் வெளியுலகத்தில் இருந்து தனிமை படுத்தப்பட்டார். ஒரு சின்ன அறையில் அவருடைய வாழ்க்கை நகர்ந்தது. அவருக்கு உணவாகக் கொடுக்கப்படும் நாசி லெமாக் பொட்டலத்தில், சுற்றப்பட்டிருக்கும் பழைய நாளிதழ்களே அவருடைய வாசிப்பிற்குத் துணையாக அமைந்தன. பழைய செய்திகளாக இருந்தாலும் அவை அவருடைய தனிமையைப் போக்கும் தற்காலிக நிவாரணிகளாக அமைந்தன.[13]
கர்பால் சிங் பழைய செய்தித்தாட்களைப் படிப்பதைப் பார்த்த பாதுகாவலர்கள், அவர் இனிமேல் 60 நாட்களுக்கு எதையும் படிக்கக்கூடாது என்று தண்டனை விதித்தனர்.[13] ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவது என்பது அதுவே அவனுக்கு வழங்கப்படும் கொடூரத் தண்டனையாகும் என்று கர்பால் சிங் சொல்கிறார்.[13]
நாடு தளாவிய நிலையில் நடைபெற்ற லாலாங் நடவடிக்கையில் (மலாய்: Operasi Lalang), 106 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஜனநாயக செயல் கட்சியைச் சார்ந்த, மலேசிய நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் தலைவர் லிம் கிட் சியாங், மலேசிய மண்ணின் மைந்தர்கள் அமைப்பின் (மலாய்: Pertubuhan Pribumi Perkasa Malaysia) தலைவர் இப்ராகிம் அலி போன்றவர்களும் அடங்குவர்.
முகச்சவரம் செய்ய அவருக்கு ஒரு வள்ளேடையும் (blade) கொடுக்க சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். தொண்டையை வெட்டிக் கொள்ளும் அபாயம் இருப்பதால் பிளேடுகள் கொடுக்க முடியாது என்று காரணம் கூறினர். அதற்கு அவர் “முகச்சவரம் செய்ய ஒரு பிளேடைக் கொடுங்கள். இல்லை என்றால், உங்களுடைய தொண்டையை நான் அறுத்துவிடுவேன்” என்று சொல்லி இருக்கிறார்.[13] தனிமையில் சிறை வைக்கப்படுவது என்பது மிக மிகக் கொடுமையானது என்று கர்பால் சிங் கூறுகிறார். எவ்விதக் குற்றச்சாட்டுகளும் இல்லாமல், தனிமனிதர் ஒருவரைச் சந்தேகத்தின் பேரில், விசாரணை இல்லாமல் இரண்டு ஆண்டுகள் தடுத்து வைக்க மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் வகை செய்கிறது.
கர்பால் சிங் சிறையில் இருக்கும் போது, அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட மலாயா கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த இருவரின் நட்பு கிடைத்தது. விடுதலையான பின்னர், அவர்களின் ஒருவரின் திருமணத்திலும் கர்பால் சிங் கலந்து கொண்டார்.[13]
மலேசியாவில் மரண தண்டனை வழங்கப்படுவதை எதிர்த்துப் போராடி வரும் இவர்,[14] இதுவரையில் வெளிநாட்டவர்களில் குறைந்தது பத்து பேரையாவது, தூக்குத்தண்டனையில் இருந்து காப்பாற்றி இருக்கிறார். மரண தண்டனையை எதிர்க்கும் இவர் ஜூலை 2010 இல், பத்து வயது குழந்தையைக் கற்பழித்த ஒரு குற்றவாளிக்கு கண்டிப்பாக தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார். அது ஒரு சர்ச்சைக்குரிய வழக்காகும்.[15]
இவர் வழக்காடிய பல உயர்மட்ட வழக்குகளில் ஆஸ்திரேலிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கெவின் பார்லோ; பிரியான் சேம்பர்ஸ் என்பவர்களின் வழக்கு மிக முக்கியமான ஒன்றாகும்.[16] ஜூலை 1985, பினாங்கு உயர்நீதிமன்றத்தில் அந்த வழக்கு நடைபெற்றது. 1986 ஜூலை 7 இல் இருவரும் புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டனர்.[16] இவர்கள் தூக்கிலிடப்பட்ட பின்னரும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கலாம் என்று கர்பால் சிங் குரல் கொடுத்து வந்தார்.[16]
அதே போல லோரேன் கோகன் (44); ஆரோன் கோகன் (20) எனும் நியூசிலாந்துகாரர்களின் போதைப் பொருள் கடத்தல் வழக்கும் பிரசித்தி பெற்றதாகும்.[17] அவர்கள் இருவரும் தாய், மகன் ஆகும். 1985 பிப்ரவரி 9 இல், 140.76 கிராம் கஞ்சா போதைப் பொருளைக் கடத்தியதற்காக அவர்களுக்கு பினாங்கு உயர்நீதிமன்றத்தில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் கர்பால் சிங் ஆஜரானார்.[17] பல போராட்டங்களுக்குப் பின்னர் இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டது. 1996 இல், பதினோர் ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டு நியூசிலாந்திற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.[18]
1997 இல், ஒரு பதினான்கு வயது சீனச் சிறுவன், சுடும் ஆயுதங்களை வைத்திருந்ததற்காக, மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவனுக்காக வாதாடிய கர்பால் சிங், அந்தச் சிறுவனைத் தூக்கிலிட்டால், அந்த நிகழ்ச்சி உள்நாட்டில் ஓர் அரசியல் கொந்தளிப்பை உண்டாக்கலாம் என்று கருத்து தெரிவித்தார்.[19] பின்னர், மலேசிய மாமன்னரிடம் இருந்து அந்தச் சிறுவனுக்கு மன்னிப்பு கிடைத்தது.
1998 இல், மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் இப்ராகிம் பாற்புணர்ச்சி வழக்கில் எதிர்த்தரப்பின் தலைமை வழக்குரைஞராகப் பொறுப்பேற்று வாதாடியுள்ளார்.[20] 1999 செப்டம்பர் மாதம் நடைபெற்ற முதல் வழக்கில் அன்வார் இப்ராகிமின் உடலில் அளவுக்கு அதிகமான விஷம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என மருத்துவச் சான்றுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். கீழ்க்காணும் வாசகங்களைச் சொல்லி நீதிமன்றத்தில் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.[21]
“ | இவரை வெளியே இருக்கும் ஒருவர் தீர்த்துக் கட்ட முடிவு செய்து இருக்கலாம்... கொலை செய்யும் அளவுக்கும் போய் இருக்கலாம்... மேலிடங்களில் உள்ளவர்கள்தான் அவற்றிற்கு காரணம் என்று நான் சந்தேகப்படுகிறேன். | ” |
அப்படி சொன்னதற்காக கர்பால் சிங், ஜனவரி 2000 இல் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். சில நாட்களுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும், அவர் மீதான குற்றச்சாட்டு எவ்வித காரணங்களும் காட்டப்படாமல் ஜனவரி 2012 இல் மீட்டுக் கொள்ளப்பட்டது.
அன்வார் இப்ராகிமின் இரண்டாவது வழக்கு 2008 இல் நடைபெற்றது. அந்த வழக்கிலும் கர்பால் சிங் எதிர்தரப்பின் பிரதான வழக்குரைஞராக வழக்காடினார்.[22] இந்த வழக்கு இரண்டு ஆண்டுகள் நடைபெற்றது. பின்னர், 2012 ஜனவரி 10 இல் அன்வார் இப்ராகிம் விடுதலை செய்யப்பட்டார்.[23][24]
ஜனநாயக செயல் கட்சி என்பது ஒரு பல்லின அரசியல் கட்சியாகக் கொள்கை கொண்டிருந்தது. அதனால், 13 மே இனக்கலவரத்திற்குப் பின்னர், 1970 ஆம் ஆண்டு ஜனநாயக செயல் கட்சியில் ஓர் உறுப்பினராகக் கர்பால் சிங் சேர்ந்தார்.[25] 1974 மலேசியப் பொதுத் தேர்தலில், கர்பால் சிங் பினாங்கில் போட்டியிடுவதாக இருந்தது. அந்தக் கட்டத்தில் அவருடைய தந்தையார் மரணமடைந்தார். அதனால், கர்பால் சிங் தேர்தலில் இருந்து பின்வாங்கிக் கொண்டார்.
எனினும், அப்போது ஜனநாயக செயல் கட்சியின் அமைப்புச் செயலாளராக இருந்த பான் இயூ தெங்கின் வேண்டுகோளுக்கு இணங்கி அலோர் ஸ்டார் நாடாளுமன்றத் தொகுதியிலும், கெடா அலோர் ஸ்டார் நகரச் சட்டமன்றத் தொகுதியிலும் கர்பால் சிங் போட்டியிட்டார். அத்தேர்தலில் நாடாளுமன்றத் தொகுதியில் அவர் தோல்வி கண்டார். சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. கெடா மாநிலத் தேர்தலில் ஜனநாயக செயல் கட்சி வெற்றி பெற்றது அதுவே முதல் முறையாகும்.
1999 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவர் வெற்றி பெற முடியவில்லை. மற்றபடி 1978 ஆம் ஆண்டில் இருந்து அனைத்து தேர்தல்களிலும் வெற்றி வாகைகள் சூடி வந்துள்ளார். 1978 இல் இருந்து 1999 வரை பினாங்கு ஜெலுத்தோங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2004 ஆம் ஆண்டில் இருந்து, பினாங்கு புக்கிட் குளுகோர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு வரையில், 29 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவையாற்றி இருக்கிறார்.
1999 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், ஜனநாயக செயல் கட்சி, மலேசிய இஸ்லாமிய கட்சியுடன் அரசியல் கூட்டு வைத்துக் கொண்டது. அதை மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் விளைவாக, 1999 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜனநாயக செயல் கட்சி கடுமையான தோல்வியைக் கண்டது. அந்த வகையில் கர்பால் சிங்கும் முதல் முறையாகத் தோல்வி கண்டார்.
1989 ஆம் ஆண்டில் மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவைத் துணைச் சபாநாயகராக டி.பி. விஜேந்திரன் என்பவர் இருந்தார். அவர்தான் அந்தப் பதவி வகித்த முதல் இந்தியர். நாடறிந்த ஒரு வழக்கறிஞரான இவர், பாலுணர்வு படங்களில் நடித்து இருந்தார் என கர்பால் சிங் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்.[26] அந்தக் குற்றச்சாட்டு ஒட்டு மொத்த மலேசிய மக்களையே அதிர்ச்சி அடையச் செய்தது.[27] பின்னர், ஆதாரங்கள் இல்லாததால் அந்தக் குற்றச்சாட்டுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து, மக்களவைத் துணைச் சபாநாயகர் பதவியை டி.பி. விஜேந்திரன் ராஜிநாமா செய்தார்.[28]
டி.பி.விஜேந்திரனின் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்பதை கர்பால் சிங் நிரூபிக்க, பாலுணர்வு காணொளிப் படங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.[29] அந்தச் சமயத்தில் மக்களவைத் துணைச் சபாநாயகராக ஓங் தீ கியாட் இருந்தார். ஆக, பொய்யான தகவல்களைச் சமர்ப்பித்தார்[30] எனும் குற்றச்சாட்டின் பேரில், 1994 மே மாதம் டி.பி.விஜேந்திரனின் மீது வேறு ஒரு சட்டப் பிரிவில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.[31] தொடர்ந்து 1998 இல் தன் மீதான குற்றச்சாட்டைத் தள்ளுபடி செய்யக் கோரி டி.பி.விஜேந்திரன் கோலாலம்பூர் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்தத் தாக்கல் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.[32]
1999 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தோல்வி கண்ட கர்பால் சிங், 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் புக்கிட் குளுகோர் தொகுதியில் 1,261 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் மறுபடியும் காலடி எடுத்து வைத்தார்.[33] அந்தத் தேர்தலில் ஜனநாயக செயல் கட்சி 20 இடங்களைப் பெற்று, தலையாய எதிர்க்கட்சியாகத் தன் தகுதியை மறுபடியும் நிலைநாட்டிக் கொண்டது.[34] 2004 செப்டம்பர் 4 இல், ஜனநாயக செயல் கட்சியின் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.[35]
2004 செப்டம்பர் 7 இல், கர்பால் சிங் மறுபடியும் ஒரு நாடாளுமன்றச் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியபிரமாணம் எடுக்கும் போது வலது கையை உயர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கர்பால் சிங் நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறி அப்படி பேசி இருக்கக்கூடாது என்றும், மூன்று நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால், அவர் நாடாளுமன்றத்தில் இருந்து ஆறு மாதங்களுக்கு தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்படுவார்[36] என்றும் நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழு முடிவு செய்தது. கர்பால் சிங்கை ஒரு மூத்த அரசியல்வாதியாக மதித்துப் பழகி வந்த நாடாளுமன்றத்தின் பாரிசான் நேசனல், பாக்காத்தான் ராக்யாட் உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்கச் சொல்லி வலியுறுத்தினர். ஆனால், கர்பால் சிங் கடைசி வரை மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.[37][38]
2010 ஏப்ரல் மாதம், மலேசிய நாடாளுமன்ற சபாநாயகரை சர்வாதிகாரி என்று அழைத்ததால்,[39] பத்து நாட்களுக்கு கர்பால் சிங் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் இருந்து தடை செய்யப்பட்டார்.[40] அதே ஆண்டு டிசம்பர் மாதம், சக எதிர்க்கட்சி உறுப்பினர்களான அன்வார் இப்ராகிம், அஸ்மின் அலி, சிவராசா ராசையா ஆகியோருடன் இவரையும் சேர்த்து நான்கு உறுப்பினர்கள் நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்வதில் இருந்து தடை செய்யப்பட்டனர். அப்கோ நிறுவனத்திற்கும் (ஆங்கில மொழி: APCO Worldwide) மலேசிய அரசாங்கத்திற்கும் இடையே சர்ச்சைகளைத் தூண்டிவிட்டதற்காக அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.[41]
2011 டிசம்பர் மாதம், கர்பால் சிங்கிற்கும், பினாங்கு மாநிலத் துணை முதல்வர் இராமசாமி பழனிச்சாமிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.[42] ஜனநாயக செயல் கட்சியில் சிலர் தமக்கு எதிராகக் கீழறுப்பு வேலைகளில் ஈடுபட்டிருப்பதாக இராமசாமி பழனிச்சாமி கருத்துக் கூறினார்.[43] அதைக் கண்டித்த கர்பால் சிங், துணை முதல்வர் இராமசாமியை ஒரு இராணுவத் தலைவர் என்று வர்ணித்தார்.[44] மாநிலத் துணை முதல்வர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.[45][46] பின்னர், இருவருக்குமான இந்த உட்பூசல் ஜனவரி 2012 இல் ஒரு முடிவிற்கு வந்தது.
மகாத்மா காந்தி, ஜான் எப் கென்னடி ஆகிய இருவரும் தம்முடைய வழிகாட்டிகள் என்று சொல்லி வரும் கர்பால் சிங்கிற்கும், ம.இ.காவின் முன்னாள் தலைவர் ச. சாமிவேலுவிற்கும் சில சமயங்களில் கருத்து மோதல்கள் ஏற்படுவதும் உண்டு. ஒரு முறை கர்பால் சிங் சொன்ன வாசகங்கள்.[47]
“ | நான் ஜெலுத்தோங் புலியாக இருந்துவிட்டுப் போகிறேன். மலேசியாவில்தான் சிங்கங்கள் இல்லையே. அதனால், சாமிவேலு வேண்டும் என்றால் ஒரு சிங்கமாக இருந்துவிட்டுப் போகட்டும். | ” |
மலேசிய நாடாளுமன்றத்திலும், பினாங்கு மாநிலச் சட்டமன்றத்திலும் கூட்டங்கள் நடைபெறும் போது கர்பால் சிங் வாக்கு விவாதங்களில் ஈடுபட்டு பெரும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தி இருக்கிறார். பினாங்கு மாநிலச் சட்டமன்றத்தில், கர்பால் சிங்கை வெளியேற்றுவதற்கு காவல்துறையினர் இருமுறை அழைக்கப்பட்டது உண்டு. சட்டமன்றத்திற்குள் நுழைந்த காவல் அதிகாரிகளை வெளியே போகச் சொல்லி குரல் எழுப்பிய இருக்கிறார். சட்ட அவைக்குள் நுழைவதற்கு, காவல் துறையினருக்கு உரிமையில்லை என்று கூறிய பின்னர், அவராகவே சட்டமன்றத்தில் இருந்து வெளியேறியும் இருக்கிறார்.
ஒரு முறை மலேசிய மாமன்னருடனும் கர்பால் சிங் சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். 1986 இல், தன் அரண்மனையில் இருவர் மீது மாமன்னர் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது என்று கர்பால் சிங் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கர்பால் சிங்கின் அந்தக் குறைகூறல் ஆளும் கட்சியினரிடையே பலத்த கண்டனத்திற்கு உள்ளானது.[48] அவர் மாமன்னரிடம் பகிங்கரமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டார்.
மன்னிப்பு கேட்க மறுத்த கர்பால் சிங், மாறாக மாமன்னர் சுல்தான் இஸ்கந்தர் மீதே நீதிமன்றத்தில் ஒரு வழக்கையும் தொடுத்தார்.[49][50][51] அந்த வழக்கில் கர்பால் சிங் வெற்றி பெறவில்லை. கர்பாலின் மீது கோபம் அடைந்த மாமன்னர், தான் வளர்த்த நாய்க்கு கர்பாலின் பெயரையே வைத்து திருப்தி அடைந்தார்.
கர்பால் சிங், நாடாளுமன்றத்தின் ஆறு மாத கால தடையுத்தரவை இருமுறை பெற்றுள்ளார்.[52] முதல் முறையாக செப்டம்பர் 2004 இல், நாடாளுமன்றத்தைத் தவறான முறையில் வழியிட்டுச் சென்றதற்காகவும், டிசம்பர் 2010 இல் நாடாளுமன்றத்தை அவமதித்ததற்காகவும் அந்தத் தடையுத்தரவுகளைப் பெற்றார்.[53][54] இரண்டாவது முறை, பாக்காத்தான் ராக்யாட் தலைவர் அன்வார் இப்ராகிம், சிவராசா ராசையாவுடன் வெளியேற்றம் செய்யப்பட்டார்.[55]
2008 மே மாத நாடாளுமன்றக் கூட்டத்தில், சபா, கினாபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினர் புங் மொக்தார் ராடினைப் பார்த்து பிக்பூட் என்று கர்பால் சிங் அழைத்தார்.[56] உடனே மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான இப்ராகிம் அலி, எழுந்து கர்பால் சிங்கைப் பார்த்து, பேசும் போது எழுந்து நின்று பேச வேண்டும் என்று கிண்டல் செய்தார். (இந்தக் கட்டத்தில் கர்பால் சிங், ஒரு சாலை விபத்தில் சிக்கி தள்ளுவண்டியில் அமர்ந்தவாறு நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தார்) அந்தக் கிண்டலான சொற்களைக் கேட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொதிப்படைந்து போயினர்.
கர்பால் சிங்கின் நாடாளுமன்ற உரிமைகள் காக்கப்படவில்லை என்று ஒட்டு மொத்த 32 எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்றத்திற்கு வெளியே பொது மக்களும் கூடினர். அந்தக் காலகட்டத்தில் நாடாளுமன்ற விவாதங்கள், மலேசியத் தொலைகாட்சிகளில் நேரடியாக ஓளிபரப்பு செய்யப்பட்டன.
2008 ஜூன் மாதம், கர்பால் சிங் ஒரு கொலை மிரட்டல் கடிதத்தைப் பெற்றார். ஒரு துப்பாக்கி ரவையுடன் அவருடைய அலுவலகத்திற்கு அந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.[57] நான்கு மாதங்கள் கழித்து, அதாவது 2008 அக்டோபர் மாதத்தில், நாடாளுமன்ற சபாநாயகர் பண்டிக்கார் அமின் மூலியாவைக் கவனக்குறைவானவர் என்றும் விளையாட்டுத்தனமாக நடந்து கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.[58]
அந்தச் சொற்கள் நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகக் கருதி கர்பால் சிங் இரு நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். அதற்கு முன், ஜூன் மாதம் 30 ஆம் தேதி, கர்பால் சிங்கின் மகன் கோபிந்த் சிங் டியோ, இரு நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். கோபிந்த் சிங் டியோ, சிலாங்கூர், பூச்சோங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகும்.[59]
2009 ஆம் ஆண்டு, பேராக் அரசியல் சாசன நெருக்கடி[60] ஏற்பட்டது. அப்போது, பேராக் சுல்தான் அஸ்லான் ஷாவின் மீது வழக்குத் தொடரப் போவதாகக் கர்பால் சிங் அச்சுறுத்தல் செய்தார்[61] அது ஓர் அரச நிந்தனை என கர்பால் சிங் மீது வழக்கு தொடரப்பட்டது.[62][63] சாம்ரி அப்துல் காதிர் என்பவரை பேராக் மாநிலத்தின் முதலமைச்சராக நியமனம் செய்வதில் அரசமைப்புச் சட்ட அதிகாரத்தைத் தாண்டி சுல்தான் செயல்பட்டுள்ளார் என்று கர்பால் சிங் வாதிட்டார்.[64][65]
2010 ஜூன் 11 இல் கர்பால் சிங் மீது அரச நிந்தனை வழக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது. எனினும் அந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[66] அதன் பின்னர், 2012 ஜனவரி 20 இல், மலேசிய மேல் முறையீட்டு மன்றம் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதைப் பற்றி விசாரணை செய்தது. பேச்சு சுதந்திரத்திற்கும் ஒரு வரையறை உள்ளது எனக் கூறிய மலேசிய மேல் முறையீட்டு மன்றம், கர்பால் சிங்கிற்கு எதிராகத் தீர்ப்பு கூறியது.[67][68]
1970 ஜூலை 30 இல் குர்மிட் கவுர் என்பவரை கர்பால் சிங் திருமணம் செய்து கொண்டார். குர்மிட் கவுருக்கு ஏழு வயதாக இருக்கும் போது அவருடைய குடும்பம் தாய்லாந்து நாராதிவாட் பகுதியில் இருந்து பினாங்கிற்கு குடியேறியது. இவர்களுக்கு ஐந்து பிள்ளைகளும், பத்து பேரப் பிள்ளைகளும் உள்ளனர். கர்பால் சிங்கின் மூத்த மகன் ஜக்டீப் சிங் டியோ, பினாங்கு மாநிலத்தில் டத்தோ கிராமாட் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.[69] இரண்டாவது மகன் கோவிந்த் சிங் தியோ, சிலாங்கூர், பூச்சோங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.[70]
மூன்றாவது மகன் ராம் கர்பால் என்பவரும், மகள் சங்கீத் கவுரும்[71] கர்பால் சிங்கின் வழக்கறிஞர் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். கர்பால் சிங்கின் நான்கு பிள்ளைகள் வழக்குரைஞர்களாகும். அவருடைய கடைசி மகன் மான் கர்பால் என்பவர் மட்டும் காப்பீட்டுத் துறையில் (ஆங்கில மொழி: actuarial science) ஈடுபட்டுள்ளார். கர்பால் சிங், தன் மனைவியுடன் 1994 ஆம் ஆண்டில் இருந்து கோலாலம்பூர் மாநகரின் டமான்சாரா பகுதியில் வாழ்ந்து வருகிறார்
2005 ஜனவரி 28 இல் ஒரு கார் விபத்தில் சிக்கிய கர்பால் சிங், முதுகெலும்பு பாதிக்கப்பட்டு, சக்கரவண்டியைப் பயன்படுத்தி வருகிறார்.[72] ஒரு வாடகைக்காரில், பின் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் போது, பின்னால் இருந்து வந்த கார் மோதியதால் விபத்து ஏற்பட்டது.[73] அவர் சக்கரவண்டியைப் பயன்படுத்துவதால், மலேசிய நாடாளுமன்றத்தில் அவருக்கு ஆகப் பின்வரிசையில் இடம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது. கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் அவர் சக்கரவண்டியில் அமர்ந்தவாறே பிரசாரம் செய்து வெற்றி பெற்றார்.[74] விபத்தின் காரணமாக அவருக்கு ரிங்கிட் 2 மில்லியன் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டது.[75]
கர்பால் சிங் 17 ஏப்ரல் 2014 அதிகாலையில் நடந்த கோர சாலை விபத்தில் கொல்லப்பட்டார். அதிகாலை மணி 1.10 க்கு வடக்கு தெற்கு நெஞ்சாலை(வடக்கு பாதை), 301.6 கிமீ, பேராக் அருகே இந்த கோர சாலை விபத்து நடந்தது. ஜோர்ஜ் டவுனில் நடைபெறவிருக்கும் வழக்கு ஒன்றில் கலந்து கொள்வதற்கு கர்பாலும் அவர் மகன், அவர் உதவியாளர் மற்றும் பணிப்பெண்ணும் சென்று கொண்டிருந்த தானுந்து முன்னாள் சென்ற சுமையுந்துவை மோதி இவ்விபத்து நடந்தது. கர்பால் மற்றும் அவரின் உதவியாளர் விபத்து நடந்த இடத்திலேயே உயிர் துறந்தனர். அவரின் மகன், தானுந்து ஒட்டுநர், மற்றும் பணிப்பெண் இந்த விபத்திலிருந்து தப்பினர். சுமையுந்து ஒட்டுநர், அவர் மனைவி மற்றும் மகள் விபத்திலிருந்து தப்பினர். அந்த சுமையுந்து ஒட்டுநர் கஞ்சா போதையில் இருந்ததாக நம்பட்டது.[76]