நடராஜா ரவிராஜ் Nadarajah Raviraj | |
---|---|
![]() | |
இலங்கை நாடாளுமன்றம் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் | |
பதவியில் 2001–2006 | |
பின்னவர் | ந. சிறீகாந்தா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
யாழ்ப்பாண நகர முதல்வர் | |
பதவியில் 2001–2001 | |
முன்னையவர் | பொன் சிவபாலன், தமிழர் விடுதலைக் கூட்டணி |
யாழ்ப்பாண நகர துணை முதல்வர் | |
பதவியில் 1998–2001 | |
யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் | |
பதவியில் 1998–2001 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சாவகச்சேரி, யாழ்ப்பாண மாவட்டம் | சூன் 25, 1962
இறப்பு | நவம்பர் 10, 2006 கொழும்பு, இலங்கை | (அகவை 44)
தேசியம் | ஈழத்தமிழர் |
அரசியல் கட்சி | தமிழர் விடுதலைக் கூட்டணி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
முன்னாள் மாணவர் | சாவகச்சேரி டிரிபேர்க் கல்லூரி யாழ் பரி யோவான் கல்லூரி |
தொழில் | வழக்கறிஞர் |
சமயம் | சைவம் |
நடராஜா ரவிராஜ் (Nadaraja Raviraj, ஜூன் 25, 1962 - நவம்பர் 10, 2006) சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.
யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார். ரவிராஜின் "ரவிராஜ் அசோசியேட்ஸ்" எனும் சட்ட நிறுவனமானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள், அவசரகாலச் சட்டத்தின் கீழான வழக்குகளுக்காக வாதாடியது. கொழும்பில் மனித உரிமைகள் சட்டத்தரணியாகவும் பணியாற்றினார்.
ரவிராஜ் சட்டத்தரணியாக இருந்து அரசியலில் நுழைந்தார். 1984 முதல் 1990 வரையிலும் 1993 முதல் 1997 வரையிலும் மனித உரிமைகள் இல்லத்தை நடத்தினார். 1987 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இணைந்தார். 1990 ஆம் ஆண்டு அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார்.
1997 ஆம் ஆண்டு யாழ். மாநகரசபை பிரதி முதல்வராகவும், 1998 இல் யாழ். மாநகரசபை முதல்வராகவும் தெரிவானார்.
2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தென்மராட்சி பகுதியில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்றார்.
2006 நவம்பர் 10 வெள்ளிக்கிழமை அன்று காலை 7:00 மணிக்கு ரவிராஜ் தெரன தொலைக்காட்சியில் நடந்த ஒரு நேரடி நேர்காணல் ஒன்றில் பங்குபற்றிவிட்டு வீடு திரும்பி பின்னர் மீண்டும் வீட்டை விட்டு தனது வாகனத்தில் வெளியேறிய போது காலை 8:45 மணியளவில் கொழும்பு நாரகேன்பிட்டிய மனிங்டவுனில் உள்ள அவரது வீட்டுக்கருகில் விசையுந்து ஒன்றில் வந்த இரண்டு இனந்தெரியாதோரால் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.[1] கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் சிகிச்சை பலனின்றி காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார். ரவிராஜின் மெய்ப்பாதுகாவலரும் காவல்துறையினருமான லக்சுமன் லொக்குவெல்ல என்பவரும் இதன்போது கொல்லப்பட்டார்.
ஒரு டி-56 ரக துப்பாக்கி ஒன்றையும் சில ரவைகளும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டன.[2] இலங்கைத் தரைப்படையின் காவல்துறை தலைமை அலுவலகத்தின் முன்னாலே தாக்குதல் இடம்பெற்றுள்ளது.[3]
தமிழீழத்தின் அதியுயர் தேசிய விருதான மாமனிதர் விருது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் வழங்கப்பட்டது.
இவர் தென்மராட்சி பகுதியில் தேர்தலில் வெற்றி ஈட்டியதன் காரணமாக, அப் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு வீதி புனரமைப்பு மற்றும் மின்சார புனரமைப்பு போன்றவை இவரின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை அரசினால் மேல்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக தென்மராட்சியின் பல சிறிய கிராமங்கள் வளர்ச்சி அடைய காரணமாயிருந்தன.